Wednesday, September 26, 2012

கோயிலில் ஏன் தீர்த்தம் கொடுக்கறாங்க?



கோயிலில் ஏன் தீர்த்தம் கொடுக்கறாங்க?





நாராயணன் என்ற பதத்தில், நாரம் என்பதற்குத் தண்ணீர்-னு பொருள்!

நீர் இன்றி அமையாது உலகு! அது போல் நீர் வண்ணன் அன்றி அமையாது உலகும் உயிரும்!

அதனால் தான் பெருமாளுக்கு எல்லாமே நீராக அமைந்துள்ளது!
அவன் பேரும் நீர்! அவன் வண்ணமும் நீர்!
அவன் உறைவதும் பாற்கடல் நீர்! அவனுடன் அலைமகளும் நீர்!
"
ஆபோ நாரா" என்று ஒரு சூக்தமும் உண்டு! பிரளய காலத்தில் ஏற்படும் நீருக்கும், படைக்கும் காலத்தில் தோன்றும் நீருக்கும் நாரம்-ன்னு பேரு!

துப்பு ஆர்க்குத், துப்பு ஆயத், துப்பு ஆக்கித், - துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை என்ற குறள் நினைவிருக்கா?
உணவை உற்பத்தி செய்யவும் நீர் தேவை! அதே சமயம், அந்த நீரே ஒரு உணவாகவும் இருக்கு!

நீரைப் போலவே நீர் வண்ணன் நாராயணனும், உலகுக்குக் காரணமாகவும் இருக்கிறான்! அதே சமயம் காரியமாகவும் இருக்கிறான்!
அதனால் தான் "ஆழிமழைக் கண்ணா" என்று மழை நீரோடு, நாரணனைச் சேர்த்தார்கள்!

நீருக்கு ஒரு பெரிய குணம் இருக்கு! - அதுக்கு வடிவம் என்பதே கிடையாது! ஆனா, எதில் ஊற்றுகிறீர்களோ, அந்த வடிவத்தை அது பெற்று விடும்!
அதே போல் தான் நீர்வண்ணனாகிய நாரணனும்!
தமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம் தானே! அடங்காது எங்கும் பரந்த பரந்தாமன், எதிலும் அடங்கி விடுவான், நீரைப் போலவே!

மீனா, ஆமையா, பன்றியா, நரசிங்கமா, குள்ளமா, உசரமா, முனிவனா, குடும்பஸ்தனா, அரசனா, மாட்டுக்காரனா, கற்சிலையா, அடியவர் மனதா - எதிலும் அடங்கி விடும் தன்மை அவனுக்கு! எளியவர்க்கு எளியனான இந்த குணத்துக்குக் கூட "நீர்மை" என்றே பெயர்!

அதனால் தான் நாரணன்-நீரான் என்பதைக் காட்டி, அவனையே நமக்கு மணக்க மணக்கப் பருகத் தருகிறார்கள்! அதுவே தீர்த்தம்! ஒரே ஒரு சொட்டு போதும்! உள்ளில் அடங்க!
அதுவும் அவன் திருமேனியில் பட்ட நீர் என்பதால், அவன் திருமேனி சம்பந்தத்தையும் நமக்கு அளிக்கிறது!

தீர்த்தம் வாங்கிக் கொள்ளும் முறையும் ஒன்று உள்ளது! கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்தால், உள்ளங்கை குவிந்து விடும். அதில் நீரைச் சிந்தாமல் வாங்கிக் கொள்ளலாம்! சிலர் வேட்டியின் நுனியையோ, துண்டின் நுனியையோ ஒரு கையில் பிடித்து இன்னொரு கையில் வாங்கிக் கொள்வார்கள்; கீழே சிந்தாது! வெளியூரில் ஏது வேட்டி? நான் கைக்குட்டையைப் பிடித்து வாங்கிக் கொள்வேன்! :-)

வாங்க, இன்றைய சுப்ரபாதத்துக்குப் போகலாம்; தீர்த்தம்னா என்ன, அதில் கலந்துள்ள பொருட்கள் என்னென்னு சொல்றாங்க!

(
இந்த சுலோகத்தைப் படிக்கும் போது, கூடவே கேட்டுப் பயில நினைத்தால், இதோ சொடுக்குங்கள்)


ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்
திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்
த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா
திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்

ஏலா லவங்க கனசார = ஏலக்காய், லவங்கம், பச்சைக் கர்ப்பூரம்
சுகந்தி தீர்த்தம் = இவற்றால் நறுமணம் கமழும் நன்னீர் (தீர்த்தம்)
தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்கள்:
பச்சைக் கர்ப்பூரம்
ஏலக்காய், இலவங்கம்
ஜாதிக்காய், வெட்டிவேர்
மருத்துவ மரப்பட்டைகள்
சிறிது மஞ்சள்
எல்லாவற்றுக்கும் மேலாக, துளசி! - இவற்றினால் உண்டாகும் வாசம், நாத்திகரையும் தீர்த்தம் பருக வைக்கும்! :-)
வாழாட்பட்டு நின்றீர் ஊள்ளீரேல், வந்து மண்ணும் மணமும் கொள்மின் என்கிறார் பெரியாழ்வார்! நீராட்டிய நீர் மட்டும் தான் தீர்த்தம் என்றில்லை! நீராட்டம் இல்லாத ஆலயங்களிலும் கூட வெறும் நீரைச் சேமித்து வைத்து தீர்த்தம் தருவது உண்டு!

எம்பெருமானுடைய திருமேனி சம்பந்தத்தால், வாசனை நீர், வாசவன் நீராக ஆகிறது.
தினமும் திருமஞ்சனம் நடக்காத கோயில்களில் கூட, சுவாமியின் திருப்பாதங்களுக்கு நீராட்டு உண்டு! அதை ஸ்ரீ பாத தீர்த்தம்-னு சொல்லுவாங்க!
மேலும் திருமஞ்சனம் செய்த பின், சுவாமியின் திருமேனியில் உள்ள ஈர ஆடையைக் களைந்து, கைகளில் சுற்றிக் கொண்டு, ஒவ்வொருவருக்கும் ஈரவாடைத் தீர்த்தம் தருவது வழக்கம்! உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை-ன்னு பெரியாழ்வார் பாசுரம்!
சிவாலயங்களில் கூட சில சமயம் தீர்த்தம் உண்டு! பூவும் நீரும் கண்டு என்பது அப்பர் பெருமானின் பதிகம்.

திவ்யம் வியத் சரிதி = அழகாக ஓடும் ஆற்று நீரை (ஆகாச கங்கை நீர் வீழ்ச்சியில் இருந்து)
ஹேம கடேஷூ பூர்ணம் = தங்கக் குடங்களில் முழுமையாக நிரப்பி,

ஆகாச கங்கை என்னும் அருவியில் இருந்து தான், திருவேங்கடமுடையானுக்கு திருமஞ்சன நீர் எடுக்கப்பட்டது!
இந்த நீர்க் கைங்கர்யம் செய்யுமாறு பெரிய திருமலை நம்பிகளை வேண்டிக் கேட்டுக் கொண்டார் இராமானுசர். மலர் கைங்கர்யத்துக்கு அனந்தாழ்வானை நியமித்து அருளினார்!


பாபவிநாசம்


ஆகாசகங்கை

மிகவும் வயதான திருமலை நம்பிகளின் உடல் நலம் கருதி, இறைவனே வந்து திருவிளையாடல் செய்தான். பாபவிநாசம் என்னும் இன்னொரு தீர்த்தத்தைக் கோவிலுக்கு அருகிலேயே உண்டாக்கினான். இப்போது இங்கிருந்து தான் தீர்த்தம் எடுக்கிறார்கள்!
இன்றும் திருமலை நம்பிகளின் வம்சத்தவர், (தோழப்பர் என்று அழைக்கப்படுபவர்கள்) ஆண்டுக்கு ஒரு முறை தண்ணீர் அமுது உற்சவத்தின் போது, பழைய ஆகாச கங்கையில் இருந்து நீர் கொணர்ந்து சமர்ப்பணம் செய்கிறார்கள்!

அது தவிர, மோசமான வானிலை போன்ற சூழ்நிலைகளில், கோவிலின் உள்ளேயே உள்ள பொற்கிணற்றில் (பங்காரு பாவி) நீர் சேந்திக் கொள்வதுண்டு. Water Management என்னும் நீர் மேலாண்மை மாதிரி தான்! இந்தக் கிணற்றைத், தரிசனம் முடித்து விமானப் பிரகாரத்துக்கு வந்தவுடனேயே எதிரில் காணலாம்!

பொற்கிணறு

த்ருத் வாத்ய = வேகமாக எடுத்து வருகிறார்கள்
வைதிக சிகாமணய = வேத ஓதும் விற்பன்னர்கள்!
ப்ருஹ்ருஷ்டா = மகிழ்ச்சியுடன் (வந்து உன் சன்னிதியில் நிற்கும் அவர்களுக்கு)
திஷ்டந்தி = காத்திருந்து அருள் புரிவாய்!

இவ்வாறு பொற்குடங்களில் நீர் எடுத்து வரும் விற்பன்னர்கள், ஆலய வாசலுக்கு வேகமாக ஓடி வருகிறார்கள்! மலை இறக்கம் வேறு அல்லவா? தானாகவே அவர்களைத் தள்ளுகிறது!
அன்று முழுதும் அடியார்க்கு நல்லபடி தரிசனம் கிடைக்க வேண்டுமே! அதற்கு காலம் தாமதிக்காது, தீர்த்தம் கொணர்ந்தால் தானே முடியும்! அதனால் தான் இந்த ஓட்டமும் நடையும்!
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால், கதிரொளித் தீபம் கலசமுடன் ஏந்தி, கோவில் வாசலுக்கு குறித்த நேரத்தில் வந்து நிற்கின்றனர்!

அப்பா பெருமாளே, அவர்கள் வரத் தாமதம் ஆனாலும் ஆகலாம்; அதனால் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்று நீயும் சின்னக் குழந்தையைப் போலச் சேட்டை செய்யாதே!
அவர்கள் சொன்ன வண்ணம் சொன்ன நேரத்துக்கு வந்து விடுவார்கள்! போதும் தூக்கம்!
அவர்கள் வருகைக்காக நீ எழுந்து காத்திரு! - தீர்த்தம் வந்த அடுத்த விநாடி ஒரு கணமும் தாமதியாது, எழுந்து தயராகி விடு!
நாளெல்லாம் உன்னைக் காண அடியார்கள் கால் கடுத்து நிற்கிறார்கள்! நீ தாமதிக்கலாமா? தத்துவம் அன்று! தகவேலோ ரெம்பாவாய்!

வேங்கட பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

No comments:

Post a Comment